சிந்தனை செய்மனமே
ஸ்ரீஹரியைத் தினமே (சிந்தனை)
சந்ததம் அடியவர் சிந்தனையில் இனிக்கும்
தத்துவ மூர்த்தியை வித்தகனை (சிந்தனை)
ஆயிரம் ஆயிரம் நிலவினை மிஞ்சும்
அருட்சுடர் பொங்கும் பரம்பொருளை
மாய விநோதனைத் தூயமா மணியை
மனம்கவர் மோகன பேருருவை (சிந்தனை)
அறிவினை, நிகரிலா ஜோதியை, புதிய
அன்பிலே மின்னெழில் பூத்தவனை,
இறைவனை, இன்பமாம் கடலிலே மூழ்கி
இருவிழி நீராகப் புளகிதமாய் (சிந்தனை)
கருத்திலே தெளிவும் கண்ணிலே அன்புக்
கனலுமாய், இதயத் தாமரையில்
இருத்துக மாதவன் இணையடி, இனிதே
எய்துக அற்புத தரிசனமே (சிந்தனை)
பூரண ஞானமும் பூரண அன்பும்
பொருந்திய பரம தயாபரனைச்
சேருக, பரவச பேரின்ப ரசத்தில்
மூழ்குக நித்தியம் மூழ்குகவே (சிந்தனை)