அருட் சோதித் தெய்வமெனை
ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்த தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம்
போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வமுயர்
நாதாந்த தெய்வம் ॥
இருட் பாடு நீக்கியொளி
ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நானெண்ணியவாறு
எமக்கருளும் தெய்வம்
தெருட் பாடலு வந்தெனையும்
சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம் ॥
தாயாகி தந்தையுமாய்த்
தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாததனித்
தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர்
மனத்தமர்ந்ததெய்வம்
மலரடியென் சென்னிமிசை
வைத்த பெரும் தெய்வம் ॥
காயாது கனியாகிக்
கலந்தினிக்கும் தெய்வம்
கருணை நிதித்தெய்வ
முற்றுங்காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும்
தெய்வம் மகாதெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம் ॥